

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 19) தொடங்கியது.
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் கதை விவாதம் மற்றும் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் ராஜமெளலி. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். என்ற இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை இணைத்து இயக்கப் போவதாக முதலில் அறிவித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி.
இதன் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 19) தொடங்கியது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பூஜை நடைபெற்ற அன்று தொழில்நுட்பக் குழுவினரையும் அறிவித்தது படக்குழு. கதை விஜயேந்திர பிரசாத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், கிராபிக்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன், ஆடை வடிவமைப்பாளர் ரமா ராஜமெளலி, வசனம் சாய் மாதவ் புரா - கார்க்கி, திரைக்கதை மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்று தெரிவித்துள்ளது படக்குழு.
’பாகுபலி’ படத்தின் 2 பாகங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால், இப்படத்துக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.