

பிரபாஸ் நடிக்கவுள்ள படமொன்றை இயக்கவுள்ளார் ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித்.
’தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரண்டு படங்களுமே பெரும் பொருட்செலவில் தயாராகி வருகின்றன. இதில் ஜனவரி 9-ம் தேதி ‘தி ராஜா சாப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தினை முடித்துவிட்டு ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். அவர் இயக்குநராக அறிமுகமாகும் கதையினைக் கேட்டுவிட்டு, உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு முன்னணி இயக்குநர்கள் பிரபாஸுக்காக கதையுடன் இருக்கும் போது, அறிமுக இயக்குநர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார், பிரபாஸ் உடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.