பாலியல் தொல்லை புகார்: மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

பாலியல் தொல்லை புகார்: மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
Updated on
1 min read

மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் மீது பிரபல நடிகை ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சணல் குமார் சசிதரன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அந்த நடிகை, சமூக வலைதளங்களில் எனது பெயருக்குக் களங்கம் விளைக்கும் வகையிலும் மிரட்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி இயக்குநர் மீது 2024-ம் ஆண்டு மீண்டும் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் கொச்சி போலீஸார் அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டனர். இந்நிலையில் மும்பை விமான நிலையம் வந்த அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

இது குறித்து சணல் குமார் சசிதரன் வெளியிட்டுள்ள பதிவில், “கொச்சி போலீஸாரால் வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸின்படி நான் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். அவர்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். என் மீதான வழக்கு என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in