அனிருத்தை கடத்தி பக்கத்தில் வைத்துக் கொள்வேன்: ‘கிங்டம்’ படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு

அனிருத்தை கடத்தி பக்கத்தில் வைத்துக் கொள்வேன்: ‘கிங்டம்’ படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Updated on
1 min read

அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால் விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டார். இதில் விஜய் தேவரகொண்டா பேசும் போது, “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.

இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று தீர்மானித்தோம்.இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.

இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று. அது ரஜினி சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து விளம்பரப்படுத்துவது என்றால், அது சென்னை மட்டுமே. ஏனென்றால் சென்னை அவ்வளவு பிடிக்கும்.

இப்படத்தின் டீஸருக்காக பின்னணிக் குரல் கொடுத்த சூர்யா அண்ணாவுக்கு நன்றி. அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும், மனதையும் அர்ப்பணித்துள்ளார். நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன். அனிருத் படத்தின் 40 நிமிஷத்தையே பாராட்ட, ரசிகர்கள் படம் மீது நம்பிக்கையுடன் நின்றார்கள். என் வார்த்தைகளை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அனிருத் சொன்னால் நம்புகிறார்கள். அந்த அளவுக்கு அவருக்கு விசுவாசம் இருக்கிறது.

‘கிங்டம்’ கதாபாத்திரத்துக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம். விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in