‘கேம் சேஞ்சரை தயாரித்தது தவறான முடிவு’ - மனம் திறந்தார் தயாரிப்பாளர் தில் ராஜு

‘கேம் சேஞ்சரை தயாரித்தது தவறான முடிவு’ - மனம் திறந்தார் தயாரிப்பாளர் தில் ராஜு
Updated on
1 min read

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம், ‘கேம் சேஞ்சர்’. தெலுங்கில் உருவான இந்தப் படம், தமிழ், இந்தியிலும் வெளியானது.

இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் வெற்றி பெறவில்லை. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இந்நிலையில் இதன் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டியில், ‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தயாரித்தது தவறான முடிவு என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “பெரிய இயக்குநர்களை வைத்து பெரிய படங்களைத் தயாரிக்கும்போது நூறு சதவிகிதம் பிரச்சினைகள் வரும். எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இது நடக்கும். ஏதாவது தவறு நடக்கும்போது, அதைத் தடுப்பது தயாரிப்பாளரின் பொறுப்பு. என்னால் அதைச் செய்ய முடியவில்லை. அது என் தோல்விதான். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

‘கேம் சேஞ்சர்’ நான் எடுத்த தவறான முடிவு. எனது கருத்துகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு அந்தப் படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். நான் அப்படி செய்யாதது என் தவறு. இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர் சமீர் முகமது கூறியது போல, படத்தின் காட்சிகள் ஏழரை மணி நேரம் இருந்தது உண்மை தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in