

‘பரோஸ்’ வசூல் குறைந்து வருவது குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.
மோகன்லால் இயக்கி, நடித்துள்ள படம் ‘பரோஸ்’. முதன் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார் மோகன்லால். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை.
இது தொடர்பாக மோகன்லால், “’பரோஸ்’ படம் பணம் பற்றியது அல்ல. அதை நான் பணத்திற்காக எடுக்கவில்லை. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்து வரும் மரியாதைக்காக அவர்களுக்கு என் பரிசு தான் ‘பரோஸ்’. குழந்தைகளுடன் குடும்பமாக பார்க்க வேண்டிய படம். அப்படம் நமக்குள் இருக்கும் குழந்தை பருவத்தைத் தூண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான ‘பரோஸ்’ திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. அனைத்து மொழியிலும் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ மற்றும் ‘பரோஸ்’ ஆகிய இரண்டுமே படுதோல்வியை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.