‘புஷ்பா 2’ நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: அல்லு அர்ஜுன் அறிவிப்பு 

‘புஷ்பா 2’ நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: அல்லு அர்ஜுன் அறிவிப்பு 
Updated on
1 min read

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில். “புஷ்பா 2 பிரீமியர் நிகழ்ச்சியின்போது இதயத்தை நொறுக்கும் ஒரு நிகழ்வு நடக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ரேவதி என்பவர் உயிரிழந்ததை அறிந்து வருத்தமடைந்தேன். திரைப்படங்களுக்குச் செல்வது நம் அனைவருக்கும் பிடித்தமான அனுபவம், ஆனால் இப்படியான சம்பவம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

நாம் என்ன செய்தாலும் இந்த இழப்பை ஈடு கட்ட முடியாது. எங்களால் முடிந்ததை செய்கிறோம். எனது தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும். குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நல்ல பொழுதுபோக்கு சினிமாவை வழங்குவதே எங்களின் நோக்கம். தயவு செய்து கவனமாக இருங்கள். படத்தை ரசித்துவிட்டு கவனமுடன் வீடு திரும்புவதை உறுதி செய்து கொள்ளுங்கள்” என அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் நடந்த ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். இதனால் இத்திரையரங்கில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், ஸ்ரீதேஜ் என்ற அவரது மகனும் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in