கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா வீட்டில் சடலமாக மீட்பு! 

கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா வீட்டில் சடலமாக மீட்பு! 
Updated on
1 min read

ஹைதராபாத்: திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கச்சிபௌலி காவல்துறையினர் கூறுகையில், “ஷோபிதாவின் கணவர் வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷோபிதா தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூரை சேர்ந்தவர் ஷோபிதா. அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

ஷோபிதாவை பொறுத்தவரை அவர் பிரபல கன்னட தொலைக்காட்சி தொடர்களான ‘பிரம்மகத்து’, ‘கவுரி’ ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். ‘ATM: Attempt to murder’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். ஷோபிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடற்கூராய்வுக்காக சோபிதாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in