‘பிரேமலு’ மார்ச் 15-ல் திரையரங்குகளில் தமிழில் ரிலீஸ்!

‘பிரேமலு’ மார்ச் 15-ல் திரையரங்குகளில் தமிழில் ரிலீஸ்!

Published on

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மார்ச் 15-ம் தேதி தமிழ் மொழியில் வெளியிடப்பட உள்ளது. படம் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ‘பிரேமலு’. கிறிஸ் ஏ.டி. இயக்கிய இந்தப் படத்தை நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் தயாரித்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான, காதல், காமெடி நிறைந்த இந்தப்படம், பிப். 9-ம் தேதி வெளியானது.

இப்படத்தின் வரவேற்பு காரணமாக தெலுங்கில் டப் செய்யப்பட்ட வெளியிடப்பட்டது. படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை வரும் 15-ம் தேதி தமிழ் மொழியில் தமிழக திரையரங்குகளில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

தற்போது மலையாள வெர்ஷனில் இப்படத்துக்கான காட்சிகள் தமிழக திரையரங்குகளில் குறைவாகவே உள்ளது. ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்துக்கான காட்சிகள் அதிகம் உள்ளன. தமிழில் ‘பிரேமலு’ வெளியாகும் பட்சத்தில் மீண்டும் அதற்கான காட்சிகள் அதிகரிக்கப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in