Published : 20 Jan 2024 05:10 PM
Last Updated : 20 Jan 2024 05:10 PM

ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோவை உருவாக்கியவர் கைது: டெல்லி போலீஸ்

புது டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோவை உருவாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ‘டீப் ஃபேக்’ ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் இருப்பது ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் இந்திய பெண் என்றும், ஏஐ டீப் ஃபேக் (Al Deepfake) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. அது ராஷ்மிகாவின் போலி வீடியோ என்று கண்டறிந்தபோது, சுமார் 15 மில்லியனுக்கும் மேலான பேர் அதை பார்த்திருந்தனர் என கூறப்பட்டது.

அமிதாப் பச்சன் அந்தப் போலி வீடியோவை பகிர்ந்து, ‘இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும், பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுபோல வேறு சில நடிகைகளின் வீடியோவும் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்ப்பத்தின் மூலம் வெளியானது. இது தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “தகவல் தொழில்நுட்ப சட்டங்களை கடுமையாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டு வருகிறது. விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ராஷ்மிகாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தற்போது இந்த போலி வீடியோவை உருவாக்கிய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் திவாரி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான மற்ற எந்த தகவலும் காவல் துறை தரப்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x