பிக்பாஸ் தெலுங்கு வின்னர் பல்லவி பிரசாந்த் கைது: சக போட்டியாளரை ஆள் வைத்து தாக்கியதாக புகார்

பிக்பாஸ் தெலுங்கு வின்னர் பல்லவி பிரசாந்த் கைது: சக போட்டியாளரை ஆள் வைத்து தாக்கியதாக புகார்
Updated on
1 min read

ஹைதராபாத்: பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 வெற்றியாளர் பல்லவி பிரசாந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்னராக அறிவிக்கப்பட்ட அமர்தீப் சவுத்ரியின் காரை பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதில் இன்ஸ்டா பிரபலம் பல்லவி பிரசாந்த் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.35 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. நடிகர் அமர்தீப் சவுத்ரி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் போட்டியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பல்லவி பிரசாந்தின் வெற்றி பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பதிவிட்டு வந்தனர்.

இந்த சூழலில் பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் இருந்து வெளியே வந்த, அமர்தீப் சவுத்ரியின் காரின் மீது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் பலரும் கடும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கார் கடும் சேதம் அடைந்தது.

இது தொடர்பான புகாரில், பல்லவி பிரசாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனடிப்படையில், பல்லவி பிரசாந்த் நேற்று (டிச.20) கைது செய்யப்பட்டார். அவரிடம் ஜூபிளி ஹில்ஸ் போலீஸார் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in