Published : 06 Nov 2023 05:44 AM
Last Updated : 06 Nov 2023 05:44 AM

நடிகை மாளவிகா அவினாஷ் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மோசடி 

பெங்களூரு: பிரபல குணசித்திர நடிகை மாளவிகா அவினாஷ். இவர், ஜேஜே, ஆதி, பைரவா, ஆறு, கைதி, கே.ஜி.எஃப் படங்களில் நடித்துள்ளார். கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து சமீபத்தில் ஓர் அழைப்பு வந்தது. அதில் உங்கள் தொலைபேசி எண் இன்னும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும் என்றும் மேலும் விவரங்கள் அறிய 9ம் எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டது.

இது தொடர்பாகத் தொலைத்தொடர்பு அதிகாரி ஒருவரிடம் மாளவிகா விசாரித்தார். விசாரணையில், மும்பை காட்கோபர் பகுதியில் இருந்து மாளவிகாவின் பெயரில் பெறப்பட்ட செல்போன் எண்களில் இருந்து மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டதாகவும் அதனால் அவர் பெயரில் உள்ள அனைத்து எண்களும் துண்டிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். இதையடுத்து அவர் வீடியோ காலில் மும்பை போலீஸில் புகார் அளித்தார். தான் யாரையும் மிரட்டவில்லை என்று கூறினார்.

மாளவிகா அவினாஷின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி சிம் கார்டுகளை பெற்று இந்த மிரட்டலில் சிலர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை மற்றொருவர் எப்படி பயன்படுத்த முடியும் என ஆச்சரியம் தெரிவித்த நடிகை மாளவிகா அவினாஷ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைப் போல ஆதாரும் முக்கியமானது. அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x