போதை பொருள் விவகாரம்: அவதூறு வழக்கு தொடர நடிகை அஷு ரெட்டி முடிவு

அஷூ ரெட்டி
அஷூ ரெட்டி
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் போதை பொருள் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி, சில நாட்களுக்கு முன்பு சைபராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை சோதித்ததில் நடிகர், நடிகைகள் உட்பட 12 திரை பிரபலங்கள் அவரிடம் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடிகைகள் அஷு ரெட்டி, சுரேகா வாணி, ஜோதி ஆகியோர் போதை வழக்கில் சிக்கி இருப்பதாகவும் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதை அந்த நடிகைகள் மறுத்துள்ளனர்.

இதற்கிடையே, சில செய்தி ஊடகங்கள் தனது செல்போன் எண்ணை வெளியிட்டு, அவதூறு செய்தி பரப்பி வருவதாக அஷூ ரெட்டி புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “என் செல்போன் நம்பரை வெளிப்படையாக சில ஊடகங்கள் வெளியிட்டு தவறான செய்திகளைப் பரப்பியுள்ளன. இதனால் தொடர்ந்து போன் அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. உடனடியாக அவற்றை நீக்காவிட்டால், நிச்சயமாக அவதூறு வழக்குத் தொடர்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in