ஒடிசா ரயில் விபத்து | நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் இரங்கல்

சிரஞ்சீவி (வலது), ஜூனியர் என்டிஆர் (இடது) |  கோப்புப் படம்
சிரஞ்சீவி (வலது), ஜூனியர் என்டிஆர் (இடது) | கோப்புப் படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு மற்றோரு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கோர விபத்து சம்பவத்துக்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஒடிசாவில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து மற்றும் அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். உயிர்களைக் காப்பாற்ற இரத்த தானத்துக்கான அவசரத் தேவை இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உயிர்காக்கும் இரத்த தானத்தை செய்வதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எனது ரசிகர்கள் மற்றும் அருகிலுள்ள நல்ல மனம் கொண்டோர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.

நடிகர் ஜூனியர் என்டிஆர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

துயரமான இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த அழிவுகரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கடினமான நேரத்தில் பலமும் ஆதரவும் அவர்களைச் சூழ்ந்திருக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 867 பேர் இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தாலும் கூட எத்தனை பேர் பயணித்தனர் என்ற உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை. பலியான தமிழர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in