

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 1929ம் ஆண்டில் ஆஸ்கர் விருது தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 1953ம் ஆண்டில் அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சி முதல்முறையாக ஆஸ்கர் விருது விழாவை ஒளிபரப்பு செய்தது.
இதன்பிறகு கடந்த 1976-ம் ஆண்டு முதல் அமெரிக்காவை சேர்ந்த ஏபிசி தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது விழாவை நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது. வரும் 2026, 2027, 2028ம் ஆண்டுகளிலும் ஏபிசி தொலைக்காட்சியில் ஆஸ்கர் விருது விழா ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
வரும் 2028-ம் ஆண்டு ஆஸ்கரின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதன்பிறகு வரும் 2029-ம் ஆண்டு முதல் யூ டியூபில் ஆஸ்கர் விருது விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்கர்
அகாடமி, யூடியூப் நிர்வாகத்துக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி வரும் 2033-ம் ஆண்டு வரை ஆஸ்கர் விருது விழாவின் ஒளிபரப்பு உரிமையை யூடியூப் பெற்றிருக்கிறது.
இது குறித்து யூ டியூப் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் கூறும்போது, “ஆஸ்கர் அகாடமியுடன் யூடியூப் கைகோத்து உள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் திரைப்பட ரசிகர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.