

மரணம் நோக்கிப் புறப்பட்ட மனிதன், மற்றொருவர் வாழ்க்கைக்காகத் தனது இறப்பை மாற்றிய கதை ‘தி பெட்ரிஃபைட் ஃபாரஸ்ட்’ (THE PETRIFIED FOREST - 1936). அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தின் வெறிச்சோடிய எல்லையில் ‘பிளாக் மெசா’ என்ற சாலையோர உணவகத்துக்கு ஆலன் ஸ்குயர் என்ற ஆங்கில எழுத்தாளர் வருகிறார்.
ஒரே ஒரு நாவல் எழுதி, பதிப்பாளரின் மனைவியைத் திருமணம் செய்து, 8 ஆண்டுகள் அவளது தயவில் சோம்பித் திரிந்து, பின்னர் அவளால் நிராகரிக்கப்பட்டவர் அவர். நோக்க மில்லாமல் வாழ்வதைவிட மரணத்தையே சிறந்த முடிவாகக் கருதும் ஆலன், பசிபிக் கடலைக் காணச் செல்லும் பயணத்தின் வழியில் உணவகத்துக்குள் நுழைகிறார்.
அங்கே பிரஞ்சுத் தாய்க்கும் அமெரிக்கத் தந்தைக்கும் பிறந்த இளம் கலைஞர் கேப்ரியெல்லைச் சந்திக்கிறார். அவளது தந்தை ஜேசன் மேபிள், போலி ராணுவ பெருமையில் வாழ்பவர். தாத்தா கிராம்ப் மேபிள் - கையில் செல்வம் இருந்தும் பேத்தியின் கனவுகளுக்காகச் செலவிட மறுக்கும் சுயநல கஞ்சர்.
ஆலனுக்கு உணவு பரிமாறிய கேப்ரியெல், அவர் எழுத்தாளர் என்று தெரிந்ததும், தான் வாசிக்கும் பிரெஞ்சுக் கவிதைப் புத்தகத்தைக் காட்டுகிறாள். கேப்ரியலுக்கு பிரான்ஸ் சென்று தன் அம்மாவைச் சந்திக்க வேண்டும், அங்கு கலை பயில வேண்டும் என்பதே தீராத லட்சியமாக இருக்கிறது.
ஆலனின் கடந்த காலத்தைக் கேட்டு, “உன் மனைவி உன்னை வெறுப்பது சரிதான்” என்று முதலில் கூறும் அவள், பின்னர் அவனது நேர்மையைக் கண்டு, “ஆனால், நீ நேசிக்கப்படத் தகுதியானவன்” என்று மாறுகிறாள். அவள் வரைந்த ஓவியங்களை ஆலன் சிலாகிப்பது அவளுக்குப் பிடித்துப்போகிறது.
உணவகத்தில் தன்னைக் காதலிக்கும் போஸ் என்ற கட்டுமஸ்தான கால்பந்து வீரனைவிட ஆலனையே அவள் நேசிக்க விரும்புகிறாள். ஆனால் ஆலன் அவளது காதலை மறுத்து, ஒரு பிரியாவிடை முத்தம் மட்டும் பெற்றுக்கொண்டு கிளம்புகிறார். உணவகத்துக்கு வந்த பணக்கார சிஷோம் தம்பதியரிடம் அவரை வழியில் இறக்கி விடுமாறு கேப்ரியல் கேட்கிறாள்.
கொலைகாரன் ட்யூக் மாண்டீ, ஆலனுடன் வரும் சிஷோம் தம்பதியரின் வண்டியைக் கைப்பற்றி, அந்த உணவகத்தை முற்றுகையிடுகிறான். ரேடியோவில் ட்யூக்கை போலீஸார் தேடும் அறிவிப்பு கேட்கிறது. ஆலனும், பாலைவன மண் புயலைச் சமாளிக்க முடியாமல் சிஷோம் தம்பதியரும் மீண்டும் அங்கு வருகிறார்கள். ஆலனைப் பார்த்ததும் கேப்ரியல் உணர்ச்சிவசப்படுகிறாள். ட்யூக் அனைவரையும் பிணைக் கைதிகளாக்குகிறான்.
அங்கு நிலவும் பதற்றமான சூழலில் தத்துவப் போர் நிகழ்கிறது. அரசாங்கத்தின் இயலாமையை கிராம்ப் சாடுகிறார். ட்யூக்கிடம் “அரசாங்கம் கைவிட்டதால் நீ கொள்ளைக்காரன் ஆனாய். வாய்ப்பின்றி தவிப்பதால் நான் விரக்தியில் இருக்கிறேன். நாம் இருவரும் காலாவதியானவர்கள்” என்கிறார் ஆலன்.
உயிர் வாழ்வதில் அர்த்தம் காணாத ஆலன், தனது மரணத்தை அர்த்தமுள்ளதாக்கத் துணிகிறார். தனது 5,000 டாலர் மதிப்பிலான காப்பீட்டுப் பத்திரத்தை கேப்ரியல் பெயருக்கு மாற்றிவிட்டு, சிஷோம் தம்பதியரை சாட்சிக் கையெழுத்திட வைத்து, தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு ட்யூக்கிடம் வேண்டுகிறார்.
தான் இறந்தால் மட்டுமே அந்தப் பணம் அவளுக்குக் கிடைக்கும், அதன்மூலம் தன் கனவை நிறைவேற்ற அவள் பாரிஸ் செல்ல முடியும் என்பதே அவரது திட்டம். போலீஸார் முற்றுகையிடும்போது தப்ப முயலும் ட்யூக்கைத் தடுத்துத் தன்னைச் சுடச் சொல்லி ஆலன் கெஞ்சுகிறார். வேறு வழியின்றி ட்யூக் சுட, குண்டுச் சத்தம் கேட்டு ஓடிவரும் கேப்ரியெல் கரங்களில் ஆலன் விழுகிறார்.
தன் ஒருநாள் காதலியின் கனவை நிறைவேற்ற தன் மொத்த வாழ்க்கையையும் தியாகமாக்கி உயிர் துறக்கிறார் ஆலன். இறுதியில் ட்யூக் பிடிபடுகிறான். ஆலனின் விருப்பப்படி அவரை அந்த ‘கல்மரக் காட்டில்’ (Petrified Forest) புதைக்க முடிவு செய்கிறார்கள்.
கேப்ரியெல் இறுதியாக ஆலனைப் பார்த்து “உன் நிலத்தில் நான் விதைத்த விதை, இனி செழித்து வளரும்... இதுவே கடவுள் நம்மை சந்திக்க வைத்த காரணம்” என்று கூறுவதோடு படம் முடிகிறது. `பெட்ரிஃபைட் ஃபாரஸ்ட்' — கல்லாக மாறிய காடு.
மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரோடு இருந்த மரங்கள் இன்று கல்லாக உறைந்து நிற்பதைப் போல கனவிழந்த மனிதர்கள் உறைந்து நிற்கும் உலகத்தை எழுதிய ராபர்ட் ஷெர்வுட்டின் நாடகத்தை, அதன் ஆன்மாவைச் சிதைக்காமல் சார்லஸ் கென்யான் – டெல்மர் டேவிஸ் திரைக்கதையில், ஆர்க்கி மேயோ சிறப்பாக இயக்கியுள்ளார்.
லெஸ்லி ஹோவர்ட், பிராட்வே நாடகத்திலும் ஆலன் ஸ்கொயராக ஒரு தோல்வியுற்ற கற்பனாவாதக் கலைஞனாக நடித்தார். மரணத்தைத் தேடும் மனிதனிடம் சோகம் இல்லை, ஓர் அமைதியான தீர்மானம் மட்டுமே இருந்தது; அந்த நுட்பத்தை அவர் அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொள்ளையன் ட்யூக் மாண்டீ, கண்களில் வெறுமை, குரலில் அமைதியான ஆபத்து, உடல்மொழியில் கட்டுப்படுத்தப்பட்ட வன்முறை என அதுவரை ஹாலிவுட் பார்த்திராத வில்லனாகத் திகழ்ந்தார்.
கேப்ரியெல்லாக வரும் பெட்டி டேவிஸ், கனவு காணும் அப்பாவித்தனம், புத்திசாலித்தனம் மற்றும் ஆலன் மீது வளரும் காதல் ஆகியவற்றை மிகை நடிப்பு இல்லாமல் வெளிப்படுத்தினார். லியோ எஃப். ஃபோர்ப்ஸ்டீன் வழங்கிய இசை, கதையின் ஆழமான உணர்வுகளைச் சிதைக்காமல், பாலைவனத்தின் வறட்சியைப் பிரதிபலித்தது.
சால் போலிட்டோவின் நேர்த்தியான ஒளிப்பதிவு, பின்னாளில் புகழ்பெற்ற ‘ஃபிலிம் நாய்ர்’ பாணிக்கு முன்னோடியான ‘ப்ரோட்டோ-நாய்ர்’ (Proto-noir) நுட்பங்களை அறிமுகப்படுத்தியது. ஓவன் மார்க்ஸ் தனது படத்தொகுப்பின் மூலம், ஒரே இடத்தில் நடக்கும் இந்த நாடகத்தைச் சினிமா மொழியில் உயிர்ப்பித்தார்.
அமைதியான காட்சிகளில் நீண்ட ஷாட்களையும், ஆபத்தான தருணங்களில் வேகமான வெட்டுகளையும் பயன்படுத்தி சிறப்பான தாளகதியை உருவாக்கினார். “உங்களின் கடைசி வாய்ப்பு என்பது வெறும் எரிபொருளுக்கானது மட்டுமல்ல, அது சிதைந்து போகும் மனித வாழ்வின் இறுதி வாய்ப்பைக் குறிக்கிறது.
நமது அரசாங்கம் ஒரு கொள்ளைக்காரனின் கேலிச்சித்திரம்” என்பது போன்ற அதிகார வர்க்கத்தைச் சாடும் கூர்மையான வசனங்கள், அரசாங்கத்தால் கைவிடப்பட்ட சமூகம் மனிதனை எப்படி மாற்றுகிறது என்ற கேள்வியை ஆழமாகப் பதிவு செய்கிறது. ஒரு குற்றப்
படம், காதல் படமாகி பிறகு தத்துவார்த்த சமூகப் படமாக முடிவடைகிறது. ஒரு வெயில் கால பகல் நேரத்தை இப்படம் பார்த்து வசந்தமாக்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com