அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ் (1954) : மனசாட்சிக்குள் நடக்கும் விசாரணை | ஹாலிவுட் மேட்னி 35

அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ் (1954) : மனசாட்சிக்குள் நடக்கும் விசாரணை | ஹாலிவுட் மேட்னி 35
Updated on
3 min read

ஒரு பெண்​ணின் மரணத்​தில், ஒரு குடும்​பத்​தின் ஒவ்​வொரு உறுப்​பினரும் தங்​களுக்கே தெரி​யாமல் சம்​பந்​தப்​பட்​டிருக்​கும் உண்​மையை ஒரு மர்ம இன்​ஸ்​பெக்​டர் வெளிக்​கொணர்​வதே ‘அன் இன்​ஸ்​பெக்​டர் கால்​ஸ்’ (AN INSPECTOR CALLS -1954) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

1912-ம் ஆண்டு இங்​கிலாந்​தில், பெரும் பணக்​கார​ரான ஆர்​தர் பெர்​லிங் தனது மகள் ஷீலா மற்​றும் ஜெரால்டு ஆகியோரின் நிச்​சய​தார்த்த விழாவை, விருந்து வைத்​துக் குடும்​பத்​தினருடன் கொண்​டாடு​கிறார். விருந்​தில் மகன் எரிக் அதி​க​மாகக் குடிப்​பதை தாய் சிபில் எச்​சரிக்​கிறாள்.

அங்கு வரும் இன்​ஸ்​பெக்​டர் பூல் என்ற அதி​காரி, பெர்​லிங் தொழிற்​சாலை​யில் வேலை பார்த்த ஈவா ஸ்மித் என்ற இளம்​பெண் விஷம் குடித்​துத் தற்​கொலை செய்​து​கொண்​ட​தாகக் கூறுகிறார். அவளது டைரி​யில் பெர்​லிங் நிறு​வனத்​தின் பெயர் இருக்​கிறது என்று கூறி, ஒரு புகைப்​படத்​தை​யும் காட்​டு​கிறார்.

அதைப் பார்த்த ஆர்​தர், தனது தொழிற்​சாலை​யில் வேலை செய்​தவள் ஈவா என்​றும் ஊதிய உயர்வு கேட்​டுப் போராடிய​தால் அவளை வேலை​யி​லிருந்து நீக்​கிய​தாக​வும் ஒப்​புக் கொள்​கிறார். வேலை​யிழந்த ஈவா, மில்​வுட்ஸ் என்ற கடை​யில் வேலைக்​குச் சேர்ந்​தாள் என இன்​ஸ்​பெக்​டர் கூறியதைக் கேட்டு ஷீலா அதிர்ச்​சி​யடைகிறாள்.

அங்கு தொப்பி வாங்​கச் சென்​ற​போது ஈவா​வின் அழகைக் கண்டு பொறாமைப்​பட்ட ஷீலா, தான் தொப்பி அணிந்​த​விதம் கண்டு ஈவா சிரித்​த​தால் ஆத்​திரமடைந்​து, அவளை வேலை​யி​லிருந்து நீக்​கச் செய்​த​தாகக் குற்​றவுணர்​வுடன் சொல்​கிறாள்.

ஈவா தன் பெயரை ‘டெய்சி ரென்​டன்’ என மாற்​றிக் கொண்​டாள் என இன்​ஸ்​பெக்​டர், ஜெரால்​டு​விடம் சொல்ல, அவன் அதிர்ச்​சி​யடைகிறான். ஆதர​வற்ற டெய்​சிக்கு அடைக்​கலம் கொடுத்​துக் காதலித்த ஜெரால்​டு, பின்​னர் அவளைக் கைவிட்​ட​தாக ஒப்​புக்​கொள்​கிறான்.

ஓர் அப்​பா​விப் பெண்ணை அவன் ஏமாற்​றியதைப் பொறுக்​காத ஷீலா, தனது நிச்​சய​தார்த்த மோதிரத்​தைத் திருப்​பிக் கொடுக்​கிறாள். பிறகு அந்​தப் புகைப்​படத்​தைத் தொண்டு நிறு​வனத் தலை​வி​யான சிபிலிடம் காட்​டு​கிறார் இன்​ஸ்​பெக்​டர்.

ஆதர​வின்றி தாய்மை அடைந்த நிலை​யில் வந்த டெய்​சி, திரு​மதி பெர்​லிங் என்ற பெயரைப் பயன்​படுத்​தி​ய​தா​லும், தாய்​மைக்​குக் காரண​மானவனைச் சொல்ல மறுத்​த​தா​லும் ஆத்​திரமடைந்து அவளுக்கு உதவ மறுத்​த​தாக சிபில் கூறுகிறாள்.

உடனே இன்​ஸ்​பெக்​டர், அந்​தக் குற்​ற​வாளி அவளது சொந்த மகன் எரிக்​தான் என்ற அதிர்ச்​சி​யான உண்​மையை வெளிப்​படுத்​துகிறார். குடி​போதை​யில் இக்​கட்​டான சூழலில் இருந்த அவனுக்கு உதவிய ஈவாவுடன் பழகிய​தால் அவள் தாய்மை அடைந்​ததை எரிக் ஒப்​புக்​கொள்​கிறான்.

இப்​படி குடும்​பத்​தினரின் ஒட்​டுமொத்த சுயநல​மும் ஈவிரக்​கமற்ற செயல்​களுமே அந்த இளம் பெண்​ணின் மரணத்​துக்கு முழுக் காரணம் என்​பதை இன்​ஸ்​பெக்​டர் ஆணித்​தர​மாக உணர்த்​துகிறார்.

சிகரெட் பிடித்​த​படி வெளி​யில் உலவும் ஜெரால்​டு, ஒரு ரோந்​துக் காவலரை விசா​ரித்​து, அங்​குள்ள காவல் நிலை​யத்​தில், பூல் என்ற அதி​காரி யாரு​மில்லை என்​ப​தைக் கண்​டறிகிறான். உடனே வீட்​டுக்கு வந்து இன்​ஸ்​பெக்​டரைத் தனி அறை​யில் அமர வைத்​து​விட்​டு, மருத்​து​வ​மனையைத் தொடர்​பு​கொண்டு இன்று எந்​தத் தற்​கொலை​யும் நடக்​க​வில்லை என்​ப​தை​யும் உறுதி செய்​து​விட்டு குடும்​பத்​தா​ரிடம் உண்​மை​யைக் கூறுகிறான்.

ஆர்​தரும் சிபிலும் இந்த வழக்​கி​லிருந்து தப்​பி​விட்​டோம் என்று நிம்​ம​தி​யடைகிறார்​கள். அந்​தப் போலி இன்​ஸ்​பெக்​டரை எச்​சரித்து அனுப்ப நினைக்​கும் வேளை​யில், எதிர்​பா​ராத​வித​மாகத் தொலைபேசி ஒலிக்​கிறது.

மறு​முனை​யில் காவல் துறையி​லிருந்​து, “ஓர் இளம்​பெண் இப்​போது​தான் விஷம் குடித்து இறந்​து​விட்​டாள், அதுகுறித்து விசா​ரிக்க ஒரு காவல் ஆய்​வாளர் வந்​து​கொண்​டிருக்​கிறார்” என்ற பகீர் தகவல் வரு​கிறது. பேர​திர்ச்​சி​யடைந்த ஆர்​தர், பூட்​டிய அறையைத் திறந்து பார்க்க, அங்கே வெறும் நாற்​காலி மட்​டும் ஆடிக் கொண்​டிருக்​கிறது.

அவர்​களை விசா​ரிக்க வந்​தது யார்? சாதாரண இன்​ஸ்​பெக்​ட​ரா, அல்​லது வேறொன்​றா? என்ற பார்​வை​யாளர்​களின் மனசாட்​சியை உலுக்​கும் கேள்​வியோடு திரைப்​படம் முடிவடைகிறது. ஜே.பி.பிரீஸ்ட்​லி​யின் மேடை நாடகத்தை அடிப்​படை​யாகக் கொண்​டு, டெஸ்​மண்ட் டேவிஸ் திரைக்​கதை அமைக்க, வாட்​டர்​கேட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் ஏ.டி.பீட்​டர்ஸ் தயாரிப்​பில், பின்​னாளில் ஜேம்ஸ் பாண்ட் படங்​களை (கோல்ட்ஃபிங்​கர்) இயக்​கிய கய் ஹாமில்​டன் தனது ஆரம்​பக்​காலத்​தில் இயக்​கிய ‘உள​வியல் த்ரில்​லர்’ திரைப்​படம்​தான் இது.

1912-ல் முதலா​ளித்​துவ சமூகத்​தால் ஒடுக்​கப்​பட்ட உழைக்​கும் வர்க்​கத்​தின் குறி​யீடே ஈவா ஸ்மித். ஒரு சமூகத்​தின் மனிதநேயமற்ற செயல்​களால் ஓர் உயிர் எப்​படிப் பலி​யாகிறது என்ற உளவியல் குற்​றத்​தைப் பேசுவதோடு, “ஒரு கொலை​யைச் செய்ய ஆயுதம் தேவை​யில்​லை; நமது அலட்​சி​ய​மும், ஈவிரக்​கமற்ற வார்த்​தைகளுமே போதும்” என்ற சுடும் உண்​மையை இப்​படம் சமூகத்​தின் முகத்​தில் அறை​கிறது.

ஒளிப்​ப​தி​வாளர் டெட் ஸ்கேஃப்: ஒரு வீட்​டுக்​குள் நடக்​கும் கதையை (ஃப்​ளாஷ்பேக் காட்​சிகளுக்கு மட்​டும் வெளி இடங்​களைக் காட்​டி​னாலும்), மேடை நாடகப் பாணியி​லிருந்து சுவாரஸ்​ய​மான திரைப்​பட​மாக்கி யிருப்​ப​தில் இவரின் பங்கு அதி​கம்.

எடிட்​டர் ஆலன் ஆஸ்​பிஸ்​டன்: மகிழ்ச்​சி​யான குடும்ப விருந்​தில் தொடங்​கும் படத்தை விறு​விறுப்​பான க்ரைம் த்ரில்​ல​ராக​வும், ஒவ்​வொரு​வரின் மனசாட்​சி​யை​யும் உலுக்​கும் உளவியல் டிரா​மா​வாக​வும் தொய்​வில்​லாமல் கடத்​துகிறார்.

இசையமைப்​பாளர் பிரான்​சிஸ் சாக்​ரின்: இன்ஸ்பெக்டரின் விசாரணை மற்​றும் உறைய​வைக்​கும் இறுதி அதிர்ச்​சித் திருப்​பத்​தின்​போது பரபரப்பை உச்​சத்​துக்​குக் கொண்டு செல்​கிறது, பின்​னணி இசை.

அலஸ்​டெய்ர் சிம் (இன்​ஸ்​பெக்​டர் பூல்): அமை​தி​யான ஆனால் ஆழமான குரல், குற்​ற​வாளி​களைச் சுட்​டெரிக்​கும் பார்வை என அக்​குடும்​பத்​தின் மனசாட்​சியை உலுக்​கும் மர்​ம​மான நீதி​மா​னாகத் தன் முதிர்ச்​சி​யான நடிப்​பால் படத்​தைத் தாங்​கிப் பிடித்​துள்​ளார்.

ஜேன் வென்​ஹாம் (ஈவா ஸ்மித்): சாதாரண தொழிற்​சாலைப் பெண்​ணாக இருக்​கும்​போது உள்ள துடுக்​குத்​தனம், காதலித்து ஏமாற்​றப்​படும்​போது ஏற்​படும் விரக்தி என ஈவா​வின் வாழ்க்​கைப் போராட்டத்​தை​யும் துயரத்​தை​யும் இயல்​பாக வெளிப்​படுத்தி யிருக்​கிறார்.

ஆர்​தர் யங் & ஓல்கா லிண்டோ (பெர்​லிங் தம்​ப​தி): இரக்​கமற்ற முதலா​ளித்​துவ வர்க்​கத்​தின் அச்சு அசலான பிர​திபலிப்பு இவர்​கள். குற்ற உணர்ச்​சியே இல்​லாத முரட்​டுப் பிடி​வாதத்​தைத் தங்​கள் உடல்​மொழி​யிலேயே மிகச் சிறப்​பாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார்​கள்.

எலீன் மூர் (ஷீலா): மிகச் சிறந்த கதா​பாத்​திர முரண். ஆரம்​பத்​தில் பணத்​தி​மிரும், பொறாமை​யும் கொண்ட பெண்​ணாக அறி​முக​மாகி, பிறகு தன் தவறை எண்​ணிக் குற்ற உணர்ச்​சி​யில் துடிப்​பது என நடிப்​பில் பரி​மாணத்​தைக் காட்​டி​யிருக்​கிறார்.

பிரையன் ஃபோர்ப்ஸ் (எரிக்): குடிக்கு அடிமை​யாகி, தவறு செய்​து​விட்டு அதிலிருந்து மீளத் துடிக்​கும் பலவீன​மான இளைஞ​னாகச் சிறப்​பாக நடித்​திருக்​கிறார்.

‘அன் இன்​ஸ்​பெக்​டர் கால்​ஸ்’ ஒரு கொலை மர்​மத்​தைப் பற்​றிய படம் அல்ல; ஒரு மனிதனின் வாழ்க்​கை​யைச் சிதைப்​ப​தில் சமூகத்​தின் ஒவ்​வொரு​வருக்​கும் எவ்​வளவு பங்கு இருக்க முடி​யும் என்​ப​தைப் பற்​றிய படம்.

ஒரு சாப்​பாட்டு அறைக்​குள் நடக்​கும் உரை​யாடல்​கள்​தான் மொத்​தப் படமும். ஆனால், அந்த அறைக்​குள் அமர்ந்​திருக்​கும் ஒவ்​வொரு​வரின் முகமூடி​யும் கிழி​யும்​போது ஏற்​படும் த்ரில்​லர் உணர்வு அபார​மானது.

குற்​ற​மும் தண்​டனை​யும் நீதி​மன்​றங்​களில் மட்​டும் வழங்​கப்​படு​வ​தில்​லை; மனிதனின் மனசாட்​சிக்​குள் நடக்​கும் வி​சா​ரணையே ஆகப்​பெரிய நீதி​மன்​றம் என்​பதை ரசிகர்​களுக்​கு மிக நேர்த்​தி​யாகக்​ காட்​டிய இந்​த உன்​னத​மான படைப்​பை தொலைபேசி​யை அணைத்​து​விட்​டு எந்​தத்​ தொந்​தர​வுமின்​றி ரசிக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும்​ படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ் (1954) : மனசாட்சிக்குள் நடக்கும் விசாரணை | ஹாலிவுட் மேட்னி 35
‘பூமராங்’ - 1947: அவசர முடிவுகளின் அரசியல் | ஹாலிவுட் மேட்னி 34

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in