பிரபலங்கள் எதிர்ப்பு எதிரொலி: புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த ட்விட்டர் முடிவு

பிரபலங்கள் எதிர்ப்பு எதிரொலி: புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த ட்விட்டர் முடிவு
Updated on
1 min read

ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன் ஆரம்பித்த #WomenBoycottTwitter (பெண்களே ட்விட்டரை புறக்கணியுங்கள்) என்ற ஹாஷ்டேக்குக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அடுத்த சில வாரங்களில் அமல்படுத்த ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீனால் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகை மெக்கோவன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து அவர் பதிவு செய்த ட்வீட்களில் தனிப்பட்ட மொபைல் எண்ணைப் பகிர்ந்ததால், அது விதிமுறை மீறல் என அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியது.

வைன்ஸ்டீன் சர்ச்சை தொடர்பாக பென் ஆஃப்லெக் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு எதிராக தான் பதிவிட்டதால் தனது கணக்கு முடக்கப்பட்டது என மெக்கோவன் தெரிவித்தார் . தொடர்ந்து #WomenBoycottTwitter என்ற ஹாஷ்டாக்கை அவர் ஆரம்பிக்க அதை சக நடிகைகள் பலரும் உபயோகப்படுத்தி ட்வீட் செய்ய ஆரம்பித்தனர்.

உலகம் முழுவதும் பல பெண்கல் இந்த ஹாஷ்டாக்கை பயன்படுத்த ஆரம்பித்ததால் அது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது.

தற்போது இது குறித்து, ட்விட்டரின் தலைமை செயல் அதிகார் ஜாக் டார்ஸி பேசியுள்ளார். "நாங்கள் போதிய நடவடிக்கைகள் எடுக்காததால் இன்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக நாங்கள் தீவிரமாக வேலை செய்து சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். எங்கள் விதிமுறைகளிலும், அதை அமல்படுத்துவதிலும் இன்னும் தீவிரம் காட்டப்படும் என்று முடிவுசெய்துள்ளோம். இது குறித்த மேலும் தகவல்கள் அடுத்த வாரம் பகிரப்படும்" என டார்ஸி ட்வீட் செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in