'வொண்டர் வுமன் 2' ஓடிடி தளத்தில் வெளியீடா? -தயாரிப்பு தரப்பு யோசனை

'வொண்டர் வுமன் 2' ஓடிடி தளத்தில் வெளியீடா? -தயாரிப்பு தரப்பு யோசனை
Updated on
1 min read

'வொண்டர் வுமன் 2' திரைப்படத்தை, திட்டமிட்டப்படி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடுவதா அல்லது வெளியீடை இன்னும் தள்ளி வைப்பதா, இல்லையென்றால் திரையரங்கில் வெளியான சில வாரங்களில் ஓடிடியில் வெளியிடலாமா என படத்தைத் தயாரித்த வார்னர் பிரதர்ஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது.

கரோனா நெருக்கடி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல்வேறு பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதில் பெரும்பாலான திரைப்படங்கள் இந்த வருடத்தின் கடைசியில் வெளியிட திட்டமிடப்பட்டு பின் மொத்தமாக அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் கண்டிப்பாக டிசம்பர் மாதம் வெளியாகிவிடும் என்று கூறப்பட்டது. இதில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் வொண்டர் வுமன் படத்தின் இரண்டாம் பாகமான 'வொண்டர் வுமன் 1984'ம் ஒரு முக்கியப் படம். ஜூன் மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம் ஒத்தி வைக்கப்பட்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இதற்கும் சாத்தியங்கள் குறைவே என ஹாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பல மாத ஊரடங்குக்குப் பின் சர்வதேச நாடுகளில் திரையரங்குள் திறக்கப்பட்டபோது டெனட் திரைப்படம் வெளியானது. கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகியிருந்த பிரம்மாண்டப் படைப்பான இந்தப் படத்தை வொண்டர் வுமன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான வார்னர் பிரதர்ஸ் தான் தயாரித்திருந்தனர்.

'டெனட்', கண்டிப்பாக கரோனா அச்சத்தையும் மீறி ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. படத்தின் மொத்த வசூல், தற்போதைய சூழலுக்குப் போதுமானதாக இருந்தாலும் கூட, வழக்கமாக கிறிஸ்டோஃபர் நோலன் திரைப்படத்துக்குக் கிடைத்திருக்க வேண்டிய வசூல் கிடைக்கவில்லை.

கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டிய திரைப்படம் என்று கூறப்பட்டிருந்த 'டெனட்' படத்துக்கே போதிய வரவேற்பு இல்லை என்பதால் 'வொண்டர் வுமன் 2' திரைப்படத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது குறித்து சந்தேகமே நிலவுகிறது. மேலும் அமெரிக்காவில் ரீகல் நிறுவனத்தின் அனைத்துத் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட ஊரடங்கால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

எனவே இந்தச் சூழலில் படத்தை வெளியிடுவது சரியானதாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பு தரப்பு படத்தைத் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்றே விரும்புகிறது. டிசம்பர் 25 திரையரங்கில் வெளியான ஒரு சில வாரங்களில், வார்னர் பிரதர்ஸின் ஓடிடி தளமான ஹெச்பிஓ மேக்ஸ் ஸ்டீமிங் சேவையில் படத்தை வெளியிடலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இல்லை திரையரங்க வெளியீடை புறக்கணித்துவிட்டு நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in