நாற்காலி சர்ச்சை: நோலனின் செய்தித் தொடர்பாளர் விளக்கம்

நாற்காலி சர்ச்சை: நோலனின் செய்தித் தொடர்பாளர் விளக்கம்
Updated on
1 min read

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநராக இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது ‘மெமெண்டோ’, ‘ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘தி டார்க் நைட்’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

கிறிஸ்டோபர் நோலனின் ‘ப்ரஸ்டீஜ்’ மற்றும் ‘தி டார்க் நைட் ரைசஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஆன் ஹாத்வே. நோலனின் திரைப்படங்கள் குறித்தும், அவரது படமாக்கல் முறை குறித்தும் பல்வேறு தகவல்களை ஒரு பேட்டியில் ஆன் ஹாத்வே பகிர்ந்திருந்தார்.

அதில் நோலன் தனது படப்பிடிப்புத் தளங்களில் நாற்காலிகளை அனுமதிப்பதில்லை என்றும் நாற்காலிகள் இருந்தால் மக்கள் அதில் உட்காருவார்கள், உட்கார்ந்தால் வேலை நடக்காது என்றும் நோலன் கருதுவதாக ஆன் ஹாத்வே கூறியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானாது. பலரும் நோலனை மீம்கள் மற்றும் பதிவுகள் மூலம் கேலி செய்து வந்தனர். இந்நிலையில் ஆன் ஹாத்வே தெரிவித்த இந்தக் கருத்துக்கு நோலனின் செய்தித் தொடர்பாளர் கெல்லி புஷ் நோவக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

''நோலனின் படப்பிடிப்புத் தளங்களில் தடை செய்யப்பட்டவை செல்போன்களும், புகைப்பிடித்தலும் மட்டுமே. ஆன் ஹாத்வே குறிப்பிட்டது, வீடியோ மானிட்டரைச் சுற்றிக் குழுமியிருக்கும் நாற்காலிகளைப் பற்றி. மற்றவர்கள் அமரும் நாற்காலிகளைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. மேலும் நோலன் தன்னுடைய நாற்காலியைத்தான் பயன்படுத்தமாட்டாரே தவிர படப்பிடிப்புத் தளங்களில் இருக்கும் நாற்காலிகளை அவர் எப்போதும் தடை செய்ததில்லை''.

இவ்வாறு கெல்லி புஷ் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in