கரோனா தொற்றால் பிரபல நடிகை மரணம்

கரோனா தொற்றால் பிரபல நடிகை மரணம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரபல நடிகையும், எழுத்தாளருமான பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணமடைந்துள்ளார்

நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சி அமெரிக்காவில் உள்ள 33 கோடி அமெரிக்கர்களில் 30 கோடி அமெரிக்க மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகையும், எழுத்தாளருமான பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 86.

பேட்ரிசியாவின் மரணச் செய்தியை அவரது வளர்ப்பு மகள் ஃபியா ஹட்ஸவ் தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

‘இந்த கொடிய வைரஸ் என்னுடைய திறமையான, சுறுசுறுப்பான, அன்பான வளர்ப்பு தாயை எடுத்துக் கொண்டு விட்டது. நீங்கள் அவரை பற்றி அனைத்து செய்திக் கட்டுரைகளிலும் படிக்கலாம், ஆனால் எங்களை பொறுத்தவரை அவர் பேட்டி. க்ரான்ட்மா பேட்டி.

அவர் மிகவும் பணிவான, அன்பான, இரக்க குணம் கொண்டவர். அவர் எங்களை தத்தெடுத்தார், பதிலுக்கு நாங்கள் அவரை தத்தெடுத்தோம்,.எல்லா வகையில் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக அவர் இருந்தார்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in