

பாலியல் தாக்குதல் வழக்கு விசாரணைக்கு நடிகர் கெவின் ஸ்பேசி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 2016-ல், நாண்டக்கெட் உணவகம் ஒன்றில், 18 வயது நபர் ஒருவரை கெவின் ஸ்பேசி பாலியல் ரீதியாக தாக்கினார் என குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு முன்பாகவே, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர், தனது மகனிடம் கெவின் ஸ்பேசி தவறான முறையில் நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது நாண்டக்கெட் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து ஸ்பேசிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.
ஸ்பேசி நேரில் ஆஜாரானால், அவரைச் சுற்றி ஏற்கெனவே உருவாகியிருக்கும் எதிர்மறையான செய்திகள் இன்னும் அதிகமாகும். மேலும் முன் தீர்மானத்தோடு ஊடகங்கள் இந்த வழக்கை அணுகுவது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வில் தாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என ஸ்பேசியின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், இந்தக் கோரிக்கையை கேப் அண்ட் ஐலேண்ட்ஸ் அட்டார்னி மைக்கேல் கியார்டினோ நிராகரித்துவிட்டார்.
முன்னதாக, இந்த விசாரணையில், தன் சார்பில், தனது வழக்கறிஞர்கள் தனக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்து வாதிடுவார்கள் என ஸ்பேசி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 7-ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடக்க உள்ளது.