

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் மூலம் பிரபலங்களின் உருவத்தை அனுமதியின்றிப் பயன்படுத்திப் போலி வீடியோக்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திரை பிரபலங்கள் வழக்குத் தொடுத்துத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், போலி வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள மிருணாள் தாக்குர் அவர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது உருவம் அல்லது அடையாளத்தைப் பயன்படுத்தி டீப்ஃபேக் மற்றும் போலி வீடியோ உருவாக்குவதோ, பகிர்வதோ சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். இதுபோன்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இது அதிகாரப்பூர்வ எச்சரிக்கை. இனி எனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எந்தச் செயலுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனது பெயர், படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஸ்ருதி ஹாசன் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஏ.ஐ மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது முகத்தை மார்ப்பிங் செய்து ஆபாசமான, விரும்பத்தகாத படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதியின்றி தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் விற்கப்படுவது, போலி விளம்பரங்கள் செய்யப்படுவதையும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள ஸ்ருதிஹாசன், அனுமதியின்றி தனது அடையாளத்தைப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15 கோடி நஷ்டஈடும் கேட்டுள்ளார்.