

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகையான ராதிகா ஆப்தே. லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் பெனடிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயானார்.
இவர் இப்போது அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் காட்டப்படும் அதீத வன்முறை, தன்னை மிகவும் பாதிப்பதாகக் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “இந்திய சினிமாவிலும் ஓடிடி தளங்களிலும் வன்முறை அதிகரித்து வருகிறது. ரத்தக்களரியான காட்சிகள் மற்றும் அதிக வன்முறையைக் கொண்ட கதைகள் இப்போது அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டதாக உணர்கிறேன். உடல் உறுப்புகளைச் சிதைக்கும் ஒருவரின் கதையை சொல்ல விரும்பினால், அவர்கள் செய்யும் கொடூரமான விஷயங்களை அப்படியே செய்வது போல காண்பிக்கத் தேவையில்லை. அது சரியான கதை சொல்லலும் இல்லை.
இதுபோன்ற வன்முறைகளைப் படங்களில் காட்டினால் சமூகத்தில் அதன் தாக்கம் பாதிப்பை உண்டாக்கும். இது மாதிரியான சூழலில் என் குழந்தையை வளர்க்கப் பயமாக இருக்கிறது.
பார்வையாளர்களுக்குத் தொடர்ந்து வன்முறையை வழங்குவதன் மூலம், அதை இயல்பாக்குகின்றனர். மக்கள் அதைத்தான் பார்க்க விரும்புகிறார்கள் என்று சொல்வது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. திரைப்படங்களில் காட்டப்படும் அதீத வன்முறை, கலாச்சாரம் மற்றும் சிந்தனையைப் பாதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.