

நடிகை ஸ்ருதி ஹாசன்
திரை பிரபலங்கள் தங்கள் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக்கோரி வழக்குத்தொடுத்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள் பலர் வழக்குத் தொடுத்து தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில், நடிகை ஸ்ருதிஹாசனும் தனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தனது அனுமதி இன்றி, செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதையும் வணிக நோக்கங்களுக்காகத் தனது அடையாளத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்தும் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருடைய பெயர், புகைப்படம், குரல், முகம் மற்றும் அவரது ஆளுமை சார்ந்த எந்தவொரு அம்சத்தையும் அனுமதி இன்றி பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இணையதளங்கள், சமூக வலைதளங்களில் ஸ்ருதி ஹாசன் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள அனுமதியற்ற டீப்ஃபேக் படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை உடனடியாக நீக்க இணைய சேவை நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.