

துப்பாக்கியைத் தவ றாகப் பயன்படுத்திய தால் கைது செய்யப்பட்டுள்ள இந்தி நடிகர் கமால் ஆர்கானின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.மும்பை அந்தேரியில் உள்ள ஒஷிவராவில் நாளந்தா சொசைட்டி என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.
இந்த வளாகத்தில் கடந்த 18-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2வது மாடியில் உள்ள எழுத்தாளர் நீரஜ் குமார் மிஸ்ரா என்பவரது வீட்டிலும் 4-வது மாடியில் இருந்த மாடல் பிரதீக் பெய்ட் வீட்டிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. குடியிருப்பு வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் நடிகர் கமால் ஆர் கான் தான் தனது துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும், யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கமால் ஆர் கான் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
உரிமம் பெற்ற துப்பாக்கியைத் தவறாகப் பயன் படுத்தியதால் அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. இதையடுத்து அவருடைய துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். கமால் ஆர் கானிடம் உள்ள 7.76 மி.மீ ஜெர்மன் தயாரிப்பு மவுசர் கைத்துப்பாக்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஆவணங்களை வெர்சோவா போலீஸார், மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.