

இந்தி நடிகையான சோமி அலி, 90-களில் முன்னணி நடிகையாக இருந்தார். சல்மான் கானுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், அவரை 8 வருடமாகக் காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.
பிறகு நடிப்பதை நிறுத்தி விட்ட சோமி அலி, அமெரிக்காவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழக்கு நடத்தும் சமூக ஆர்வலராக உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சல்மான் கானின் பெயரைக் குறிப்பிடாமல், தனது காதல் உறவில் நடந்த அத்து மீறல்கள் குறித்துப் பேசியதால், பாலிவுட்டில் தனது நெருங்கிய நட்பு வட்டங்கள் தன்னை விட்டு விலகியதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, தபு ஆகியோர் அப்போது எனது நெருங்கிய தோழிகளாக இருந்தனர். நான் அப்போது டீனேஜ் பெண்ணாக இருந்த தால், எனது உலகம் காதலனைச் சுற்றியே இருந்தது. எனது உறவில் இருந்த கசப்பான பக்கங்களில் அவர்கள் பங்கெடுக்க விரும்பவில்லை. இதற்காக அவர்கள் மீது எனக்கு இப்போது கோபம் ஏதுமில்லை.
சுனில் ஷெட்டி, சகோதரராகக் கருதிய விவேக் ஓபராய் போன்றவர்களும் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர். அப்போது அந்த நடிகர் என்னைப் பற்றிய மோசமான வதந்திகளைப் பரப்பினார். எனக்கு புற்றுநோய் என்றும் போதைப்பொருள் மற்றும் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும் மனநலம் பாதிக்கப் பட்டவள் என்றும் பொய்யாக பரப்பினார்.
என்னுடைய வாழ்க்கை மற்றும் எனது சமூக நலப் பணிகள் குறித்த ஆவணத் தொடர் டிஸ்கவரி பிளஸ் மற்றும் அமேசான் பிரைமில் ஒளிபரப்பானது. அந்த நடிகர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 3 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்நிகழ்ச்சியை வெறும் 2 மாதங்களில் நிறுத்திவிட்டார்.
‘நீங்கள் அவரைப் பற்றி பேசாமல் இருந்தால் உங்கள் அறக்கட்டளைக்குப் பணம் தருகிறோம்’ என்று சொல்லி என்னை மிரட்டினார்கள். அந்த அழுக்கு பணம் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டேன்” என்று சோமி அலி தெரிவித் துள்ளார்.