

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் 2ம் பாகம் மார்ச் 19-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை ரூ.1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதில் 1989-ம் ஆண்டு சன்னி தியோல் நடிப்பில் வெளியான ‘திரிதேவ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒயே ஓயே திர்ச்சி டோபிவாலே’ என்ற பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகத் திரிமூர்த்தி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
முறையான உரிமம் பெறாமல் இந்தப் பாடல் திரையரங்குகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த ஒரிஜினல் பாடலின் இசை உரிமம் தங்களிடமே இருக்கிறது என்றும் அந்நிறுவனம் அதில் கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, ராயல்டி மற்றும் இழப்பீடு தொடர்பான விவகாரங்களை இரு தரப்பினரும் மத்தியஸ்தம் மூலம் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார். இந்த நடைமுறையை மேற்பார்வையிட மூத்த மத்தியஸ்தரை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.