அக்‌ஷய் குமாரை விடாது துரத்தும் பாக்ஸ் ஆபிஸ் சோகம் - ‘செல்ஃபி’ ரூ.2.55 கோடி மட்டுமே வசூல்!

அக்‌ஷய் குமாரை விடாது துரத்தும் பாக்ஸ் ஆபிஸ் சோகம் - ‘செல்ஃபி’ ரூ.2.55 கோடி மட்டுமே வசூல்!
Updated on
1 min read

அக்‌ஷய் குமார் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான அவரது ‘செல்ஃபி’ திரைப்படம் முதல்நாளில் ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் பால் லால் இயக்கத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெளியான படம் ‘ட்ரைவிங் லைசன்ஸ்’. மலையாளத்தில் வரவேற்பை பெற்ற இப்படத்தின் அதிகாரபூர்வ தழுவலை ஏற்று பாலிவுட்டில் உருவான படம் ‘செல்ஃபி’. ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தவிர நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நேற்று (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியானது.

தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாலிவுட்டின் துயரங்களை ‘பதான்’ ரூ.1000 கோடி வசூலால் துடைத்து வரும் நிலையில், அக்‌ஷய்குமாரின் இந்தப் படம் முதல் நாளில் ரூ.2.55 கோடியை மட்டும் வசூலித்திருப்பது மீண்டும் பாலிவுட் திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அக்‌ஷய் குமார் படங்களில் மிகவும் குறைந்த முதல் நாள் வசூலை ஈட்டிய படமாக ‘செல்ஃபி’ வரலாறு படைத்துள்ளது. 2021-ல் அவரது குறைந்த ஓப்பனிங்கான ‘பெல்பாட்டம்’ படம் கூட ரூ.2.75 கோடியை வசூலித்திருந்தது. அதற்கு முன்னதாக 2010-ல் வெளியான ‘ஆக்‌ஷன் ரீப்ளே’ படம் ரூ.2.75 கோடி முதல் நாள் வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது ‘செல்ஃபி’ அவரது படங்களிலேயே குறைந்த ஓப்பனிங் கொண்ட படத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in