இந்தியாவில் ரூ.400 கோடி கிளப்பில் நுழைந்த முதல் பாலிவுட் படம் - ‘பதான்’ சாதனை
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.729 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.400 கோடியைக் கடந்த முதல் பாலிவுட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்தது.
இந்நிலையில், தற்போது 10 நாட்கள் முடிவில் படம் ரூ.729 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ‘பதான்’ ரூ.453 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாலிவுட் படம் இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடியை எட்டியிருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.400 கோடி கிளப்பை தொடங்கி வைத்த நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றிருக்கிறார்.
