“பிரபாஸுக்காக இன்னொரு புராஜெக்ட் தயாராக இருக்கிறது” - ‘ஆதி புருஷ்’ தயாரிப்பாளர்

ஆதி புருஷ் படக்குழு
ஆதி புருஷ் படக்குழு
Updated on
1 min read

நடிகர் பிரபாஸுடன் இணைந்து மற்றொரு படத்தையும் தயாரிக்க இருக்கிறோம் என ‘ஆதி புருஷ்’ படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசரை படக்குழு அயோத்தியில் வெளியிட்டது. 'ஆதி புருஷ்' படத்தின் டீசரில் உள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போலவும், சோட்டா பீம் டீசர் போலவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அயோத்தியில் டீசர் வெளியிட்டு விழாவின்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் பூஷன்குமார், "பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுடன் எங்களின் டி-சீரிஸ் நிறுவனம் இணையும் நான்காவது படத்தைத் தயாரிக்கவுள்ளது. 'சாஹோ', 'ராதே ஷ்யாம்', தற்போது 'ஆதி புருஷ்' இதையடுத்து, மேலும் ஒரு படத்தில் நாங்கள் பிரபாஸுடன் இணைகிறோம்'' என்றார்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தை பூஷன் குமார் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in