Published : 10 Aug 2022 02:38 PM
Last Updated : 10 Aug 2022 02:38 PM

“யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” - ஆமீர்கான் உருக்கம் 

''யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்'' என நடிகர் ஆமீர்கான் உருக்கமாக தெரிவித்துள்ளார். 'லால் சிங் சத்தா' படத்தை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் ஒலிக்கும் நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் ஆமீர்கான், ''நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது'' என கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் நீட்சியாக ஒவ்வொருமுறையும் ஆமீர்கானின் படங்கள் வெளியாகும்போது, சமூக வலைதளங்களில், 'பாய்காட்' என்ற வார்த்தையுடன் படத்தின் பெயரையும் சேர்த்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், ஹாலிவுட் க்ளாசிக் என அழைக்கப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் தழுவலாக ஆமீர்கான் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 11) வெளியாக உள்ள 'லால் சிங் சத்தா' படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் 'பாய்காட் லால் சிங் சத்தா' (boycott laal singh chaddha) ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இது குறித்து படத்தின் ப்ரமோஷனின்போது ஆமீர்கான் விளக்கம் அளித்து வந்த நிலையில், இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 'லால் சிங் சத்தா' பட ப்ரமோஷனின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆமீர்கான், ''நான் யாரையாவது, எந்த வகையிலாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. என் படத்தை யாராவது பார்க்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்தப் படத்தில் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. படம் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''படம் குறித்து எனக்கு பதற்றமாகத்தான் இருக்கிறது. நான் தூங்கி 48 மணி நேரம் ஆகிவிட்டது. நான் நகைச்சுவைக்காக இதை சொல்லவில்லை; என்னால் தூங்க முடியலை. என் மூளை அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் நான் புத்தகங்களைப் படிக்கிறேன், ஆன்லைனில் செஸ் விளையாடுகிறேன். ஆகஸ்ட் 11-க்கு பிறகுதான் என்னால் தூங்க முடியும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x