

'யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை' என்று பாஜக ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துக்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினரான திரவுபதி முர்மு பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. இந்நிலையில், அவரது அறிவிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், ''திரவுபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கவுரவர்கள் யார்?'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சை ஏற்படுத்தியது. இதையடுத்து ராம்கோபால் வர்மா மீது தெலங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில் ராம்கோபால் வர்மா தன்னுடைய முந்தைய பதிவை மேற்கொள்காட்டி "மகாபாரதத்தில் திரவுபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பெயர் மிகவும் அபூர்வமானது என்பதால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை" என்று ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.