அக்‌ஷய் குமார் என்னை ரகசியமாகப் பாராட்டினார்: கங்கணா ரணாவத்

அக்‌ஷய் குமார் என்னை ரகசியமாகப் பாராட்டினார்: கங்கணா ரணாவத்
Updated on
1 min read

'தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் தன்னை ரகசியமாக அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் பாராட்டினார்கள் என நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

மார்ச் 23 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு கங்கணாவின் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது இந்த ட்ரெய்லருக்கு வந்த பாராட்டுகள் குறித்து கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"என்னை சாதாரணமாக வாழ்த்துபவருக்கே பிரச்சினை வரும் அளவு அதிக பகைமையுணர்வு இருக்கும் இடமே இந்த பாலிவுட். அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலபெரிய நட்சத்திரங்களிடமிருந்து ரகசியமாக அழைப்புகளும், செய்திகளும் எனக்கு வந்துள்ளன. அவர்கள் தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லரை வானளவு பாராட்டினார்கள். ஆனால் ஆலியா, தீபிகாவின் படங்களைப் பாராட்டும் விதத்தில் அவர்களால் வெளிப்படையாக என்னைப் பாராட்ட முடியவில்லை. திரைப்பட மாஃபியாவின் பயங்கரவாதம் இது.

கலையைச் சார்ந்த ஒரு துறை சார்பற்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். திரைத்துறையில் அதிகாரம், அரசியல் எதுவும் வரக் கூடாது. என்னைக் கொடுமைபடுத்த, துன்புறுத்த, தனிமைப்படுத்த, எனது அரசியல் பார்வைகளும், ஆன்மிகக் கொள்கையும் காரணங்களாக இருக்கக் கூடாது. அப்படி நடந்தாலே நான் கண்டிப்பாக ஜெயித்துவிடுவேன்" என்று கங்கணா ட்வீட் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in