ஊரடங்குக்குப் பிறகு அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் ’டெனட்’

ஊரடங்குக்குப் பிறகு அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் ’டெனட்’
Updated on
1 min read

இந்தியாவில் ஊரடங்கு காலத்துக்குப் பின் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற பட்டியலில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான ’டெனட்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

புக்மைஷோ இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு இந்தியாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. 2800 திரைகள் தற்போது இயங்கி வருகின்றன.

இதில் கிட்டத்தட்ட 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையுடன் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக ’டெனட்’ இருக்கிறது. அக்டோபர் 16 முதல் டிசம்பர் 18 வரையிலான காலகட்டத்தின் தரவு இது.

அதிக டிக்கெட் விற்பனையில் அடுத்தடுத்த இடங்களில் ’பிஸ்கோத்’, ’இரண்டாம் குத்து’ ஆகிய தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. இதற்குப் பிறகு ’சூரஜ் பே மங்கள் பாரி’ என்கிற இந்திப் படமும், ’ட்ராகுலா சார்’ என்கிற வங்காள மொழிப் படமும் உள்ளன.

அதிக டிக்கெட்டுகள் விற்ற நகரங்கள் என்கிற பட்டியலில் கொல்கத்தா முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஊரடங்குக்கு முந்தைய காலகட்டத்தைப் பொருத்தவரையில், டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான தரவுகளின் படி, ’தன்ஹாஜி’, ’அலா வைகுந்தபுரமுலோ’, ’சரிலேரு நீக்கெவரு’, ’தர்பார்’, ’பீஷ்மா’ ஆகிய படங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருந்தன.

திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், ஓடிடி மற்றும் திரையரங்குகள் என இரண்டு தளங்களுக்குமான ரசிகர்களுமே இருப்பார்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in