என் பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படவில்லை: கரண் ஜோஹார் விளக்கம்

என் பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படவில்லை: கரண் ஜோஹார் விளக்கம்

Published on

போதை மருந்து தடுப்புப் பிரிவினரின் நோட்டீஸுக்கு பதில் அளித்துள்ள பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், கடந்த வருடம் தனது வீட்டில் நடந்த பார்ட்டியில் யாரும் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டியின் காணொலி ஒன்று இணையத்தில் பரவியது. இதில் இருந்தவர்கள் போதை மருந்து உட்கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இந்த பார்ட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் கேட்டு ஜோஹருக்கு போதை மருந்து தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பினர். வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் கேட்டிருந்ததால் ஜோஹர் தனது விளக்கத்தைச் சமர்ப்பித்துள்ளார். இதில் அந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் தீபிகா படுகோன், அர்ஜுன் கபூர், விக்கி கவுஷல், வருண் தவன், ரன்பீர் கபூர், மலைகா அரோரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகச் செய்திகள் பரவின. இது தொடர்பாக அதிகாரிகளிடமும் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஷிரோமனி அகாலி தளக் கட்சியைச் சேர்ந்த மஞ்சீந்தர் சிங் சிர்ஸா என்பவர் இந்தப் புகாரை அளித்திருந்தார். கடந்த வருடம் ஆகஸ்டு மாதமே தான் இது குறித்துப் புகார் செய்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சிர்ஸா மீண்டும் புகார் அளித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தக் காணொலி குறித்து கரண் ஜோஹர் விளக்கம் அளித்துள்ளார். தனது பார்ட்டியில் போதை மருந்து பயன்படுத்தியதாகக் கூறப்படுவது பொய்யான, அவதூறான குற்றச்சாட்டு என்று அவர் தெரிவித்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in