ஏதென்ஸ் விமான நிலையத்தில் தீபிகாவின் சிலை - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஏதென்ஸ் விமான நிலையத்தில் தீபிகாவின் சிலை - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Published on

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். 2006ஆம் ஆண்டு தொடங்கி திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது தீபிகா தனது கணவர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் ‘83’ திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ஏதென்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஒன்றில் 'உலக மக்களின் உண்மையான புன்னகைகள்’ என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது ஏதென்ஸ் அரசு. அவர்களை வரவேற்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா என உலகின் பல்வேறு நாட்டு பிரபலங்களின் சிலைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் இந்தியா சார்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் சிலையும் அந்த கண்காட்சியில் உள்ள புகைப்பட வரிசையில் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில் கருப்பு நிற மார்பிள் கல்லினால் தீபிகாவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இந்திய பாலிவுட் நடிகை ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார் என்று எழுதப்பட்டுள்ளது.

இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இப்புகைப்படத்தை தங்கள் சமூக வலைதளப் பக்கங்கலில் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபிகாவுக்கு லண்டனின் உள்ள மேடம் துஸாட் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in