விவசாயிகளை தீவிரவாதி என விமர்சித்த நடிகை கங்கனா ர‌னாவத் மீது வழக்கு

விவசாயிகளை தீவிரவாதி என விமர்சித்த நடிகை கங்கனா ர‌னாவத் மீது வழக்கு
Updated on
1 min read

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறு போராடும் விவசாயிகளுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து தனது கருத்துகளை பகிர்ந்தார். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்த சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் எல்லாம் தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிராக கர்நாடகத்தில் ரமேஷ் நாயக் என்ற வழக்கறிஞர், தும்கூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ந‌டிகை கங்கனா ரனாவத்தின் பதிவு விவசாயிகளின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இளைஞர்களின் மனதில் கெட்ட எண்ணங்களை விதைக்கும் வகையிலும், வன்முறைக்குத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே கங்கனா ரனாவத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A, 504, 108 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், தும்கூரு நகர‌ எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் கங்கனா ரனாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கியாதசந்திரா காவல் நிலைய போலீஸார், கங்கனா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in