போதைப் பொருள் வழக்கில் ரியா சக்கரவர்த்தி ஜாமீனில் விடுதலை

போதைப் பொருள் வழக்கில் ரியா சக்கரவர்த்தி ஜாமீனில் விடுதலை
Updated on
1 min read

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் (34) கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாக மீட்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த மாதம் 8-ம் தேதி கைது செய்தனர்.

ஜாமீன் கோரி ரியா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 29-ம் தேதி விசாரித்தது. பிறகு தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில் ரியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

ரியா தவிர, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் ஷோவிக் உள்ளிட்டோரும் ஜாமீன் கோரியிருந்தனர். இவர்களில் ஷோவிக், போதைப் பொருள் விற்பனையாளர் அப்தெல் பரிஹார் ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார். சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா, சுஷாந்த் வீட்டுப் பணியாளர் திபேஷ் சாவந்த் ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சுமார் 1 மாத சிறைவாசத்துக்கு பிறகு ரியா நேற்று மாலை சிறையில் இருந்து விடுதலையானார். அவரது நீதிமன்றக் காவலை விசாரணை நீதிமன்றம் நேற்று முன்தினம் அக்டோபர் 20 வரை நீட்டித்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in