அனுராக் காஷ்யப் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்: பாயல் கோஷ் வழக்கறிஞர் சாடல்

அனுராக் காஷ்யப் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்: பாயல் கோஷ் வழக்கறிஞர் சாடல்
Updated on
1 min read

அனுராக் காஷ்யப் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்று நடிகை பாயல் கோஷின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பாயல் கோஷ் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து அனுராக் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அனுராக் விரைவில் கைது செய்யப்படவேண்டும் என்று பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதின் சத்புதே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''நான் இங்கே அனைத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இப்போது காவல் நிலையம் சென்று கொண்டிருக்கிறேன். அனுராக் விரைவாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. ஏனென்றால் இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம். நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்தும் இதுவரை அனுராக்கிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எங்களுக்குப் பதில் தேவையில்லை. போலீஸ் அவரைக் கைது செய்தால் போதும்''.

இவ்வாறு பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதின் சத்புதே கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in