பாலிவுட்டில் கடந்த 10 ஆண்டுகளாக போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது: இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி குற்றச்சாட்டு

பாலிவுட்டில் கடந்த 10 ஆண்டுகளாக போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது: இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி குற்றச்சாட்டு

Published on

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து சாடிப் பேசி வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பாகவும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொக்கைன் போன்ற போதைப் பொருட்களுக்கு பாலிவுட் உலகம் அடிமையாகிக் கிடப்பதாக புதிதாக ஒரு சர்ச்சையை கங்கணா கிளப்பினார். இது சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியது.

இதனிடையே கங்கணாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக பாலிவுட்டில் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

''கடந்த 10 ஆண்டுகளாக பாலிவுட்டில் இருக்கும் பெரும் பிரபலங்களால் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிப் போய்விட்டது. போதைப் பொருட்கள் மட்டுமின்றி மாஃபியா, பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான சட்டவிரோத குற்ற நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

சுஷாந்த் விவகாரத்தில் பலரைக் காப்பாற்றுவதற்காக ரியா பொதுவெளியில் பொய்களைக் கூறிவருகிறார்''.

இவ்வாறு விவேக் அக்னிஹோத்ரி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in