Last Updated : 18 Aug, 2020 09:39 PM

 

Published : 18 Aug 2020 09:39 PM
Last Updated : 18 Aug 2020 09:39 PM

சுஷாந்த் மரணம் வெளியுலகிற்குத் தெரியும் முன்னரே காதலிக்கு ஆறுதல் கூறிய பிரபலம்: மீண்டும் சூடுபிடிக்கும் மரண சர்ச்சை

இயக்குநர் மகேஷ் பட்டுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் சுஹ்ரிதா தாஸ் என்பவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது. சர்ச்சையும் கிளப்பியுள்ளது.

சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்திக்காக இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது. பதிவில் என்ன இருக்கிறது என்பதை விட அது எப்போது பதிவிடப்பட்டுள்ளது என்பது தான் இந்தப் பதிவு வைரலாகக் காரணம். ஜூன் 14, காலை 11.08 மணிக்கு, அதாவது சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்துவிட்டார் என்பது அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவதற்கு முன்பே பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது சுஹ்ரிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தை லாக் செய்துள்ளார். மேலும் அந்தப் பதிவைப் பற்றிப் பலரும் பேச ஆரம்பித்துள்ளதால் அதை நீக்கியுள்ளார். ஆனால் அந்தப் பதிவின் ஸ்க்ரீன்ஷாட் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது. சுஷாந்தின் பெட்ரூம் கதவு திறக்கப்படும் முன்னே, அவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது தெரியாததற்கு முன்னே எப்படி ஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைப் போட்டிருக்க முடியும் என்பதே பலரின் கேள்வி.

அந்தப் பதிவின் தமிழாக்கம்:

அன்பார்ந்த ரியா, இந்த உலகம் சுஷாந்துக்காக வருத்தமும், அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவிக்கும் போது நான் உன்னுடன் உறுதியாக நிற்கிறேன். அவரை ஒழுங்காக, நிலையாகக் கொண்டு செல்ல நீ எடுத்துள்ள எண்ணற்ற முயற்சிகளை அமைதியான பார்வையாளனாகப் பார்த்ததால், ஒரு அம்மாவாக, இந்த நாட்டின் பிரஜையாக ஒரு விஷயத்தை அனைவருக்கும் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை எனக்கு இருக்கிறது. மன அழுத்தம் (clinical depression) என்பது பேரழிவைத் தரும் பிரச்சினை. அதற்கு இது வரை மருத்துவத்தில் தீர்வோ, பதிலோ கிடையாது.

நீ ஒவ்வொரு முறையும் மகேஷ் பட்டிடம் ஆலோசனைக் கேட்க அலுவலகத்துக்கு ஓடி வரும் போது, ஃபோனில் அவரோடு பேசும்போதும் நான் உன் பயணத்தை, உன் போராட்டத்தைப் பார்த்திருக்கிறேன். சுஷாந்த் வீட்டில் ஒரு நாள் மாலை மொட்டை மாடி சந்திப்பை மறக்க முடியாது. உலகில் எல்லாம் சகஜமானது போல் தோன்றினாலும் ஆழ்மனதில் சுஷாந்த் நம்மை விட்டு விலகிக் கொண்டிருந்தார். மகேஷ் பட் அவர்கள் அதைப் பார்த்தார். அதனால் தான் பர்வீன் பாபி பற்றி அவரது ஆசான் யுஜி (கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் சொன்ன அதே வார்த்தைகளை உன்னிடம் சொன்னார். 'விலகிச் சென்று விடு. இல்லையென்றால் அது தன்னோடு உன்னையும் இழுத்துக் கொண்டுவிடும்'.

நீ எல்லாவற்றையும் கொடுத்தாய். அதைத் தாண்டியும். உன்னால் ஆனதை விட அதிகமாகச் செய்திருக்கிறார். லவ் யூ. வலிமையாக இரு".

ஞாயிற்றுக்கிழமை அன்று, பாஜக ராஜ்ய சபா எம்பி, சுப்பிரமணியம் சுவாமி, சுஹ்ரிதா தாஸ் பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்திருந்த ஒரு ட்வீட்டைப் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில், "பட்டின் கூட்டத்தைச் சேர்ந்த இந்த பெண்மணி எப்படி காலை 11 மணிக்கு இந்தப் பதிவை எழுதியிருக்க முடியும். அப்போதுதான் வீட்டின் சாவிக்காக ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தனர். ஜாக்கிரதை, மிக முக்கியமான ஆதாரம் மக்களே. இதைப் படியுங்கள், வைரலாக்குங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே சுஷாந்தின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி சுஷாந்தின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையும் கோரியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x