

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பகிரங்க குற்றச்சாட்டுகளை நடிகை கங்கணா ரணாவத் முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படி வாரிசு அரசியலை ஊக்குவிப்பவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் கங்கணா தாக்கிப் பேசியிருந்தார். டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் அவர் விமர்சித்திருந்தார்.
மேலும் கங்கணாவின் சமூக வலைதளப் பக்கத்தில், ‘டாப்ஸி தன் வாழ்நாளில் தனியாக நடித்த ஒரு ‘சோலா’ படம் கூட வெற்றி பெற்றதில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை ரசிகர் ஒருவர் பகிர்ந்து, டாப்ஸியிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள டாப்ஸி கூறியுள்ளதாவது:
'' ‘சோலா’ படம் என்று எதுவும் கிடையாது. எந்தவொரு நடிகரையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. திரைப்படம் என்பது அனைத்து நடிகர்களும், அனைத்துத் துறையும் சேர்ந்த ஒரு கூட்டுமுயற்சி. யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு முக்கியக் கதாபாத்திரம் மட்டும் படத்தில் நடித்துவிட முடியாது. மரியாதை என்பதை நாமாக சம்பாதிக்க வேண்டும், உத்தரவு போட்டு வாங்கக் கூடாது''.
இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே டாப்ஸி - கங்கணா இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் முற்றி வருவது குறிப்பிடத்தக்கது.