

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு நடிகை டாப்ஸி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2020-21 ஆம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதில் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
12-ம் வகுப்பு பாடத் திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் மாறுதல் நிலை, இந்தியாவில் சமூக இயக்கங்கள், உயர் பண மதிப்பிழப்பு ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இயின் இந்த முடிவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாலிவுட் நடிகை டாப்ஸி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறறுகையில், ''ஏதேனும் ஒரு ‘அதிகாரபூர்வ’ அறிவிப்பை நான் தவறவிட்டுவிட்டேனா? அல்லது இவை எல்லாம் எதிர்காலத்தில் நமக்குத் தேவைப்படாதா? கல்வியில் சமரசம் செய்தால் நம் எதிர்காலம் கேள்விக்குறிதான்'' என்று கூறியுள்ளார்.