பாகுபலிக்கு சற்றும் குறைந்ததல்ல கட்டப்பா கதாபாத்திரம் - பின்னணிக் குரல் கொடுத்த சமாய் தாக்கர் பெருமிதம்

பாகுபலிக்கு சற்றும் குறைந்ததல்ல கட்டப்பா கதாபாத்திரம் - பின்னணிக் குரல் கொடுத்த சமாய் தாக்கர் பெருமிதம்
Updated on
1 min read

எஸ்.எஸ். ராஜமவுளி இயக்கத்தில் ப்ரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, நாசர் உள்ளிட்டோர் நடித்த படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்றது. உலக மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனையை செய்தது.

இப்படத்தில் ‘கட்டப்பா’ என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் இது. ‘பாகுபலி’ முதல் பாகம் வெளியானபோது ‘பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்’ என்ற கேள்வி நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகும் அளவுக்கு இக்கதாபாத்திரம் வலுவானது.

இந்நிலையில் ‘பாகுபலி’ இந்தி பதிப்பில் சத்யராஜுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்த சமாய் தாக்கர் கட்டப்பா கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

பாகுபலி கதாபாத்திரத்துக்கு சற்றும் குறைந்ததல்ல கட்டப்பா கதாபாத்திரம். ப்ரபாஸ் மற்றும் சத்யராஜ் தான் படத்தின் இரண்டு ஹீரோக்கள். படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்ததைப் போல நான் உணர்ந்ததில்லை. படம் முழுக்க கட்டப்பாவாக நான் இருப்பதைப் போலவே உணர்ந்தேன்.

முதல் பாகத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரமாக இருந்த கட்டப்பாவுக்கு சரியான முறையில் குரல் கொடுத்ததைப் போல இரண்டாவது பாகத்தில் காமெடி காட்சிகளிலும் சரியான முறையில் நான் குரல் கொடுக்கிறேனா என்பதில் படக்குழுவினர் கவனமாக இருந்தார்கள். ஒரு மேடை நாடக கலைஞனாக என்னால் முடிந்த அளவு கட்டப்பா கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தேன்.

இவ்வாறு சமாய் தாக்கர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in