அக்‌ஷய் குமாருக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்

அக்‌ஷய் குமாருக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்
Updated on
1 min read

அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள 'பெல்பாட்டம்' என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாணி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படம் 'பெல்பாட்டம்'. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இந்தப் படம் இந்த வருடத்தின் கடைசியில் படப்பிடிப்புடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில் நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

படத்தில் நடிக்கத் தேர்வானது குறித்துப் பேசியுள்ள வாணி கபூர், "அக்‌ஷய் குமாருடன் சேர்ந்து திரையில் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் இந்த ஆரம்பக் கட்டத்திலேயே என்னை மிகச் சவுகரியமாக உணர வைத்திருக்கும் ஒட்டுமொத்தக் குழுவுடனும் சேர்ந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன். இந்த உற்சாகம் திரையிலும் அழகாகத் தெரியும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

வாணியைத் தேர்வு செய்தது குறித்துப் பேசியுள்ள தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி, "வாணி புத்திசாலித்தனமான நல்ல நடிகை. அவரது படங்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும். அக்‌ஷயின் திரை ஆளுமைக்கு ஈடாக படத்தில் நாயகியும் இருக்க வேண்டும். இது ஒரு முக்கியக் கதாபாத்திரம். வாணி இதை சிறப்பாகச் செய்வார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 2, 2021 அன்று 'பெல்பாட்டம்' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in