ஆலியா பட் நடிப்பில் வெளியாகும் புதிய திரைப்படம்: புறக்கணிக்கச் சொல்லும் நெட்டிசன்கள்

ஆலியா பட் நடிப்பில் வெளியாகும் புதிய திரைப்படம்: புறக்கணிக்கச் சொல்லும் நெட்டிசன்கள்
Updated on
1 min read

இயக்குநர் மகேஷ் பட் பல வருடங்களுக்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் சடக் 2வை புறக்கணிக்க நெட்டிசன்கள் கோரி வருகின்றனர்.

இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு நடிகர்கள், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புத் தருபவர்கள் எனப் பலரும் அடுத்தடுத்து விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை தருவதாகவும், வெளியிலிருந்து வரும் கலைஞர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன,

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கும் திரைப்படம் சடக் 2. இது 1991ஆம் ஆண்டு அவர் இயக்கிய சடக் படத்தின் இரண்டாவது பாகம். இதில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் என இருவரும் நடிக்கின்றனர். மகேஷ் பட்டின் சகோதரர் முகேஷ் பட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் ஆலியாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆதித்யா ராய் கபூரும், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரின் சகோதரர்.

இப்படி பல்வேறு வாரிசுகள் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து போஸ்டர் வெளியானதுமே பெரிய அளவிலான எதிர்ப்பு இணையத்தில் எழுந்துள்ளது. நெட்டிசன்களின் கோபம், மகேஷ் பட்டின் பக்கத்திலேயே எதிரொலித்தது. மகேஷ் பட், சுஷாந்தின் முன்னாள் காதலி ரியாவிடம், சுஷாந்த் மனநலம் சரியில்லாதவர் என்று ஒரு கட்டத்தில் கூறியது அண்மையில் செய்தியாக வந்ததும் இந்த எதிர்ப்புக்கு இன்னொரு காரணமாகியுள்ளது.

மகேஷ் பட் வெளியிட்டுள்ள போஸ்டர், "முடிவுக்கு வரும் போதுதான் முடிவே இல்லை என்று தெரியவருகிறது" என்ற வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"இன்னொரு வாழ்வுக்கு வேண்டுமென்றே முடிவு கட்டும்போது, விரைவில் நீங்கள் உங்கள் முடிவையும் உணர்வீர்கள்" என்று ஒரு பயனர் இதை வைத்தே கிண்டல் செய்திருந்தார்.

இன்னொருவர், " இவர் 26/11 நிகழ்வை ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சி என்று சொன்னவர். இவர்து சொந்த மகனே தீவிரவாதிகளுக்கு உதவியவர், இவரோட சுஷாந்த் மனநலம் சரியில்லாதவர் என்று அறிவித்தவர், இவரது பேத்தியை விட குறைவான வயதிருக்கும் பெண்ணுடன் உறவில் இருப்பவர், இவர் எப்படி இன்னும் சிறையில் அடைக்கப்படாமல் இருக்கிறார் என்பது தெரியவில்லை'' என இன்னொரு பயனர் கேள்வி கேட்டிருக்கிறார்.

ஆலியா பட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் பின்னூட்டங்களை முடக்கி வைத்துள்ளார். ஆதித்யா ராய் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போது, மகேஷ் பட்டுக்கு நேர்ந்த கதியே நேர்ந்தது. பெரிய எதிர்ப்பையும், விமர்சனத்தையும் ஆதித்யாவின் பதிவு எதிர்கொண்டது.

திங்கட்கிழமை அன்று சடக் 2, நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in