

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரர் மனைவி சுதா தேவி உடல்நலக் குறைவால் காலமானார். சுஷாந்த் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடந்த நாளில் அவர் உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பல மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல்தான் அவரது இந்த நிலைக்குக் காரணம் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிறு அன்று சுஷாந்த் மறைந்த செய்தியைக் கேட்டதிலிருந்தே, அவரது சகோதரர் அம்ப்ரேந்திர சிங்கின் மனைவி சுதா தேவி உணவு சாப்பிட மறுத்துள்ளார். உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. சுஷாந்த் பிஹாரில் இருந்தபோது அவரது பக்கத்து வீட்டில் இவர் குடும்பம் வசித்துள்ளது.
ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருந்த சுதா தேவி, உணவும் உட்கொள்ளாததால் திங்கட்கிழமை மாலை ஐந்து மணி அளவில் உயிரிழந்தார். அன்றுதான் சுஷாந்தின் இறுதிச் சடங்கு நடந்தது. சுஷாந்தின் மரணத்தால் கடும் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சுதா தேவியின் மரணமும் உலுக்கியுள்ளது.