பல இளைஞர்களுக்கு அடையாளம், உதாரணம் சுஷாந்த் சிங்: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

பல இளைஞர்களுக்கு அடையாளம், உதாரணம் சுஷாந்த் சிங்: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்
Updated on
1 min read

பல இளைஞர்களுக்கு அடையாளம், உதாரணம் சுஷாந்த் சிங் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங்கின் திடீர் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"திறமையான இளம் நடிகரான சுஷாந்த் சிங்கின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தை அளிக்கிறது. வெள்ளித்திரையில் அற்புதமான சில கதாபாத்திரங்களுக்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். பல இளைஞர்களுக்கு அவர் ஒரு அடையாளமாகவும், உதாரணமாகவும் இருந்துள்ளார். அவர் நம்மை விட்டு விரைவாக சென்றுவிட்டார். அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்"

இவ்வாறு வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in