

திறமையான இளம் நடிகர் விரைவாக சென்றுவிட்டார் என்று சுஷாந்த் சிங் மறைவு குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங்கின் திடீர் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சுஷாந்த் சிங்கின் மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். திறமையான இளம் நடிகர் விரைவாக நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்"
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.